Monday, November 3, 2008

தீராத ஆசைகள்

படை பரிவாரங்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு
பரத்தையரிடம் போனார் கடவுள்
இதனால் தொடையிடுக்கில்
அவருக்குப் படை வந்துவிட்டது.

'சிட்டி சென்டர் போகவேண்டும்' என்பது
கடவுளின் தீராத ஆசை.
கம்பவுன்டர் பரிந்துரைத்த களிம்பை தடவிக்கொண்டு
காலாற நடந்தார்.

சின்னப் பெண்களின் சென்ட் வாசனை
அவரைத் தூக்கி நிறுத்தியது!
முகர்ந்து பார்த்தபடியே
எக்ஸலேட்டரில் ஏறி நின்றார்
‘சூப்பரா கீதே...!’ -நினைத்தபோதே
தடுக்கி விழுந்தார்.

‘கெக்கலி பிக்கலி’ என்று
சிரித்து மகிழ்ந்தனர் பெண்கள்
கடவுள் கொஞ்சம் அழகு!
சிரித்த பெண்களின் இடுப்பைத் தடவி
கிரெடிட் கார்டை திருடிக்கொண்டார்.

கலர்களை கணக்குப்பண்ணும் நோக்கில்
‘காஃபி ஷாப்’பில் நுழைந்தார்
‘கப்பச்சினோ’வை காயவைத்துவிட்டு
உதடுகளை நக்கிக்கொண்டிருந்தனர் மக்கள்.

அங்கிருந்து ஐநாக்ஸ் தியேட்டர்
போனவருக்கு அதிர்ச்சி!
சீதைகளைத் தள்ளிக்கொண்டு
அனுமார்கள் இடம் பார்த்துக்கொண்டிருந்தனர்
திரையில் ‘அவளோட ராவுகள்.’

கடவுளுக்கு எரிச்சலாகிவிட்டது
சரியில்லாத களிம்பால் அரிப்பு அதிகமாகியது
அடக்கிக்கொண்டும் அகட்டிக்கொண்டும் நடந்தார்.

எச்சில் துப்ப எட்டிப்பார்த்த ஆட்டோக்காரன்
கடவுளை கவனிக்கவில்லை
மண்டை உடைந்து ரோட்டில் விழுந்தார்
‘சட்டம்’ தெரிந்த மக்கள் ‘சட்டை’ செய்யவில்லை.