Tuesday, February 26, 2008

"நான்கு பெக் ஸ்காட்ச்சும், அறுபது சிகரெட்டுகளும்" ‍ஒரு நிர்வாணச் சாமியாரின் வாக்குமூலம்.


கொல்லிமலையில் நிர்வாணமாக அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கக்கூடிய ஒரு சாமியாரைப் பார்க்கப் போகிறோம் என்பதால், சீரியஸான எதிர்பார்ப்புடன்தான் உள்ளே நுழைந்தேன்.

கதவைத் தாண்டி காலடி எடுத்து வைத்தலிருந்தே என் கற்பனைகள் ஒவ்வொன்றாக உடையத் தொடங்கின. கதவு, மின்னனு அட்டையை உள்வாங்கிக் கொண்ட பின்னரே திறந்தது. உள்ளே நுழைந்தால், ஊழியர்கள் இதமான குளிரில் லேப்டாப்பைத் துழாவிக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ட்ரெண்டுக்கு ஏற்ற ஃபேஷன் உடைகளை அணிந்த அழகிய மங்கைகள் ஆங்காங்கே விளம்பரப் படங்களில் தொங்கிக் கொண்டிந்தார்கள்.

கண்ணுக்கு இதமான வெளிச்சம் சிதறியிருந்த ஓர் அறையில், தனது ஆப்பிள் சிஸ்டத்திலிருந்து விரல்களை விடுவித்து, "ஹலோ! ஹவ் ஆர் யூ?” என்று கை குலுக்கி வரவேற்றார் ஸ்வாமி பிரணவானந்தா.

ஆசிரமத்தில் விளைந்த காப்பிக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சூடான காஃபியை பருகியபடியே "பொதுவாக
ஐரோப்பியர்கள் கிறிஸ்துவத்தை பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். ஒரு பிரெஞ்சுப் பிரஜையான நீங்கள் எப்படி இந்துக் கடவுள்களைப் பின்பற்றும் சாமியாராக மாற்றமடைந்தீர்கள்? என்றக் கேள்வியுடன் ஆரம்பமானது உரையாடல்.

அது 71-ம் ஆண்டென்று நினைக்கிறேன். வேலை விஷயமாகத்தான் மனைவி குழந்தையுடன் இந்தியா வந்தேன். அப்பொழுதெல்லாம் எங்களுக்கு இந்தியா என்றால் மகாராஜாக்கள், தேங்காய், புலி, வறுமை, நிறைய கலாச்சாரங்கள் என்பது மட்டுமே நினைவுக்கு வரும்.

இந்தியா வந்ததும் சென்னையில் உள்ள வர்த்தக நிறுவன‌ம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
ஆரம்பத்தில் மூன்று நான்கு வருடங்கள் நன்றாகத்தான் ஓடியது வாழ்க்கை. திடீரென வேலை இழந்து வருமானத்துகு வழியில்லாமல் வறுமைக்குத் தள்ளப்பட்டேன். இதனால், மனைவியும் குழந்தையும் என்னை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டது.

தினம் நான்கு பெக் ஸ்காட்சும், அறுபது சிகரெட்டுகளுமாக கழிந்த என் வாழ்க்கை, ரோட்டோரக் கடைகளில் சிங்கிள் டீயும், வீசியெறிந்த துண்டு சிகரெட்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துப் புகைக்கும் நிலமைக்கும் வந்து நின்றது.

விஸ்கியோ, பிராந்தியோ கனவுகளில் மட்டுமே நினைத்துப் பார்க்கிற ஒர் வஸ்துவாகிப் போனது. எப்பொழுதாவது நாலைந்து பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தேன்"

கூறிவிட்டு கண்களை மூடிச் சிந்தனையில் ஆழ்கிறார் பிரணவானந்தா.

"இதோ புகைப்படத்தில் இருக்கிறாரே ஸ்வாமி சர்வேஸ்வரா! இவர்தான் என் குருஜி. இன்றைய என் நிலை அத்தனைக்கும் இந்த மகான்தான் காரணம். எவ்வளவோ வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் இருந்தும், தனக்கென்று எதையும் ஆசைப்படாத மனிதர்.

வாழ்க்கையே வெறுத்து, மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருந்த என்னை, நன்பர் ஒர்வர்தான் சுவாமிஜியிடம் அழைத்துச் சென்றார். உளுந்தூர்பேட்டைதான் ஸ்வாமிஜி இருந்த இடம்.

தொழுநோயால் தாக்கப்பட்டு, இரண்டு கைகளும் கால்களும் இழந்த நிலையில் மிக சந்தோஷமாகவே அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இதைப் பார்த்தபோதுதான் எனக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறந்தது. ‘இப்படிப்பட்ட மனிதரே வாழ்க்கையைச் சிரமமுமின்றி எதிர் கொள்கிறபோது, திடகாத்திரமாக உள்ள நம்மைப் போன்றவர்களால் ஏன் வாழ முடியாது?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அவரையே என் மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டு அங்கேயே தங்கி, அவருக்கு பணிவிடைகள் செய்தேன். அவரின் போதனைகளைக் கேட்டுத் தெளிந்தேன்.

சொன்னால் நம்புவீர்களா?

ஒருநாள் சென்னையிலிருந்து குருஜியை பார்ப்பதற்காக உளுந்தூர்பேட்டை வந்திருந்தேன். வானம் நீலம் படர்ந்து காணப்பட்டது. பூமியில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம். நான் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

குருஜி என்னைப் புன்முறுவலுடன் கையமர்த்திவிட்டு, வானத்தை ஒரு பார்வை பார்த்தார். என்ன ஆச்சர்யம்! இப்பொழுது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. திடீரென மேகம் திரண்டு, வானம் இருண்டு, மெல்லிய மழைச் சாரல் வீச ஆரம்பித்துவிட்டது.

அதற்கு மேல் என்னால் முடியவில்லை. நான் முழுமையாக குருஜியிடம் சரணாகதி அடைந்துவிட்டேன். கிரிஸ்டியன் ஃபேப்ரே என்கிற பழைய மனிதன் இறந்து போய் பிரணவானந்தா என்று குருஜியால் உயிர்விக்கப்பட்டேன். குருஜி ஒரு துறவி மட்டுமல்ல. அவர் ஒரு சித்தர்.”

பிரணவானந்தா சொன்னதைக் கேட்டதும், என‌க்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

"சுவாமிஜி! சாதாரண சாமியார்களைப்போல் இல்லாமல் சித்தர்கள் அதீத சக்தி படைத்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இவர்களின் உடலில் அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி இருந்திருக்குமே! அப்படியிருக்கையில், தொழுநோய் எப்படி தாக்கியிருக்க முடியும்?”

இப்படி எதிர்க் கேள்வி வைக்கிற நேரங்களில், பொதுவாக சாமியார்கள் கோபப்படுவார்கள்.

"நல்ல கேள்வி" என்று ஆமோதித்தவாறே "நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், அவ்வளவு சக்தி படைத்த குருஜி நோய்க்கிருமிகளை தனக்குள் ஏன் அனுமதித்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அவரால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரக்கூட முடியாது. கிட்னி பழுதடைதிருந்தது. நான் நல்ல நிலைக்கு உயர்ந்து, என்னிடம் பணம் புழங்க ஆரம்பித்த பிறகு, குறைந்தபட்சம் அவருக்கு மருத்துவச் சேவை செய்யக்கூடவா முடியாமல் போகும்? ஆனால், கடைசிவரையில் மருத்துவம் பார்த்துக் கொள்ள குருஜி அணுமதிக்காததோடு, ஒரு பைசாகூட யாரிடமும் எதிர்பார்க்கவில்லை.

இன்று, நடக்கிற ரோட்டில் ஆரம்பித்து இமயமலைவரை எத்தனையோ சாதுக்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான சாதுக்கள் எல்லாவற்றையும் துறந்து, பிச்சை எடுத்து உயிர் வாழ்வதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் 90 % பிச்சை எடுத்துச் சாப்பிட்டே காலம் கழிக்கிற இவர்கள் 10 % சாமி கும்பிடுகிறார்கள். அந்த பத்து சதவிகிதத்தையும் நாளைய சாப்பாட்டுக்காக வேண்டுவதிலேயே செலவிடுகிறார்கள்.

ஏதோ அவர்களிடம் ஒரு சக்தி இருப்பதாக மக்கள் நம்பினால், அதையே தங்களுக்கு சாதகமாக்கி வியாபாரமாக்கிவிடுகிறார்கள். மரத்திற்கு மரம், மூலைக்கு மூலை, காணிக்கைகள் மூலம் கடவுளிடம் அழைத்துச் செல்கிற சாமியார்கள் பெருகிவிட்டார்கள்.

எனது அனுபவத்தைப் பொறுத்தவரையில், கடவுள் என்பதற்கு பெயரோ, உருவமோ கிடையாது. எளிய மக்கள் வழிபாடு மூலமாக கடவுளை அடைய, உருவங்கள் உதவ முடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை. எனது அறைகளிலும் அத்தகைய கடவுள்கள் இருக்கிறார்கள்.

ஒரு ரூபாய் உண்டியலில் ஆரம்பித்து ஒரு கோடி, பல கோடிவரை பணம் பெறும் சாமியார்களுக்கு மத்தியில், தன் மருத்துவத் தேவைகளைக்கூட புறக்கணித்துவிட்டு, பணமே வேண்டாமென்று வாழ்ந்த எங்கள் குருஜி மதிப்புமிக்கவர்தானே.

தன்னுடைய மரணத்தைக்கூட அவர் திட்டமிடவில்லை. இறந்த பிறகு எப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில்கூட இடத்திற்குத் தக்கபடி மக்களுக்கு நம்பிக்கைகள் இருக்கிறது.

எரிக்கிறார்களோ, புதைக்கிறார்களோ! இறந்த பிறகு ஒவ்வொரு மனிதனும் கோடிக்கணக்கான மூலக்கூறுகளாகப் பிரிந்து காற்றாக, நீராக, நிலமாக, தாவரமாக என்று எல்லாவற்றிலும் கலந்து வாழ்கிறான் என்பதே உண்மை.

குருஜி ஏன் தன் உடலை நோய்க்கிருமிகளுக்கு உணவாக, உறைவிடமாக நிலை நிறுத்திக் கொண்டார் என்கிற உண்மை தெரிந்தால், நான் ஏன் உங்களோடு பேசிக்கொண்டிருக்கப் போகிறேன்"

நிதானமாக பதில் கூறுகிறார் பிரணவானந்தா.

“ஒரே நேரத்தில் எப்படி உங்களால் துறவியாகவும், தொழிலதிபராகவும் செயல்பட முடிகிறது?”

சிரித்தபடியே சொல்கிறார்.

''நீங்கள் ஒரு நபரைக் காதலிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நான் ராத்திரி ஏழு மணியிலிருந்து எட்டு மணிவரை மட்டுமே காதலிப்பேன் என்று டைம் ஃபிக்ஸ் பண்ணிவிட்டா காதலிப்பீர்கள்?

நீங்கள் உங்கள் தினசரி வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதுகூட காதல் உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை உணர்வீர்கள் அல்லவா? கடவுளும் அப்படித்தான்.

எனது நிர்வாக விஷயங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதுகூட பக்தி என்னுள் சுடர்விடுவதை உணர முடிகிறது. எதுவும் எதற்கும் தடையாய் இருப்பதில்லை.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமாக சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஃபேஷன் இண்டர்நேஷனல்’ என்கிற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான பிரணவானந்தா, இதில் வரும் லாபத்தை சாதாரண ஆயா முதல் ஆஃபீசர்வரை அத்தனை பேருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து வருகிறார்.


"ஓய்வு நாட்களில் கொல்லிமலையில் உள்ள உங்களின் ஆசிரமத்தில் நிர்வான நிலையில் இருந்தபடியே பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டு இருக்கிறீர்களாமே?”

"ஆமாம். குருஜிதான் இந்த இடத்திற்கு என்னை போகச் சொன்னார். 36 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள அந்த ஆசிரமத்தில், எல்லாமே இயற்கையாக விளைகின்றன. மின்சாரம்கூட சூரிய சக்தியிலிருந்துதான் எடுக்கிறோம். முன்புபோல பெருவாரியான மக்கள் கூட்டத்தை இப்போது அனுமதிப்பதில்லை. ஆரம்பத்தில் அமைதியாக வருகிறவர்களால், போகப் போக இயற்கைச் சூழல் மாசுபடத் தொடங்குகிறது. பக்தர்களைப் பயன்படுத்தி பிசினஸ் செய்யவும் நான் விரும்பவில்லை. இயற்கையோடு வாழ்தல் என்பதுதான் இதன் சிறப்பு''.

“எங்கோ யாராகவோ பிறந்தீர்கள், எங்கோ இன்னொருவராக வாழ்கிறீர்கள். நீங்கள் யார் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?”

''நான் பிரான்சில் கிருஸ்துவனாகப் பிறந்தேன். இந்தியக் கலாச்சாரங்களின்படி வாழ்கிறேன். எப்படி வாழ வேண்டும் என்பதை நாமே தீர்மாணிக்க வேண்டும். நான் கிருஸ்தவனோ அல்லது இந்துவோ அல்ல. ஒரு சராசரி மனிதன், அவ்வளவு தான்''.

கை குலுக்கி விடை பெறுகிறார் ப்ரணவானந்தா.

-நான் கடவுள்

மரணத்தின் பின் மனிதர் நிலை?

"தியானம்". இது மரணத்தைக் கடந்து அதற்குப் பிறகான மற்ற உலகங்களைப் பற்றியும், ஆத்மாவாகிய உயிர் இறுதியாக இறைவனிடத்தில் கொண்டு சேர்க்கப்படுகிற வழித்தடங்களையும் மனிதனுக்கு காட்டக்கூடிய ஒரு உலகமாக இருக்கிறது. "நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிற கடமைகள், செயல்களினால் சிக்கியிருக்கும் மனம் தியானத்தின் பொழுது அதிலிருந்து விலகி மெல்ல... மெல்ல... ஒன்றுமற்ற ஒரே புள்ளியில் குவிகிற போது இந்த உண்மைகள் புலப்படும்" என்கிறார்கள் ஞானிகள்.

மரண பயத்திற்கு உட்படாத மனிதர்கள் உலகில் ஒருவர் கூட இருக்க முடியாது. என்றைக்கு நிகழும் என்று நிச்சயிக்கப்படாத முடிவுகள் நிழல் போல் பின் தொடர்ந்த வண்ணம் மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. எல்லாம் தெரிந்தும் எல்லாவற்றின் மீதும் தீர்க்க முடியாத ஆசைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பயமும், வெறுப்பும் கொள்கிற போது சிலர் மரணத்தைத் தாங்களாகவே தீர்மானிக்கின்றனர். எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்வது ஒன்றே மகிழ்ச்சியானது என்று மனிதர்கள் நம்புகிறார்கள். ஆனால் மரணம் தான் மகிழ்ச்சியானது என்பதாக தங்களின் உயிருள்ள போதே ஜீவ சமாதியடைந்த ஞானிகள் உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள்(செத்தால்தான் நிம்மதி என்பது அவர்களின் நம்பிக்கை).

மரணத்தின் பின் மனிதர் நிலை என்ன? சொர்க்கமா, நரகமா? மறு பிறப்பு உண்டா? விவாதங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் இமையமலைக் குரு, பாபாஜியின் சீடர்களில் ஒருவரான பரமஹம்ஸ யோகானந்தர் 1936-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி மும்பை ரீஜென்ட் ஓட்டல் அறையில் கட்டிலின் மீது அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது விவரிக்க முடியாத ஒரு ஒளிக்கீற்று தியானத்திலிருந்து அவரை எழுப்புகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு இதே 10-ம் தேதி மார்ச் மாதம், பூரி ஆசிரமத்தில் புதைக்கப்பட்ட அவரது குரு ஸ்ரீ யுக்தேஸ்வரர் ரத்தமும், சதையுமாக எதிரில் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார். நம்பமுடியாத அதிசயம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.

"இது நீங்களா?" என்று திகைத்துப்போன யோகானந்தர், பூரியின் கொடிய மணலில் புதையுண்ட அதே சரீரமா இது? என்று கேட்டபடியே சென்று யுக்தேஸ்வரரைக் கட்டியனைத்துக் கொள்கிறார்.

"ஆம். எந்த உடலை நீ புதைத்தாயோ! அதே ஸ்தூல உடல் தான். அதே போன்ற ஒரு சரீரத்தை இந்தப் பிரபஞ்சத்தின் அணுக்களிலிருந்து படைத்தேன். இப்பொழுது நான் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறேன். ஆனால் இந்தப் பூவுலகில் அல்லாமல் ஒளி வடிவிலான சூட்சும உலகத்தில்" என்கிறார் ஸ்ரீ யுக்தேஸ்வரர்.

மெல்ல யோகானந்தரின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சொல்கிறார்,

"இந்த மண்ணுலகில் உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு எப்படி மகான்கள் பிறப்பெடுக்கிறார்களோ! அப்படியே சூட்சும உலகில் உள்ளவர்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்து முக்தியடைந்து, அடுத்தபடியாக "ஹிரண்ய லோகம்' அடைய உதவும் பொருட்டு நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். ஹிரண்ய லோகத்தில் உள்ளவர்கள் அனைவரும் பூமியில் மரண காலத்தின் போது தங்கள் உடலை உணர்வுடனேயே விட்டுவிட்டவர்கள். சூட்சும உலகம் என்பது பூமியில் உள்ளவர்கள் இறந்த பின்பு வந்தடையும் ஒரு பிரதேசம்.

கடவுள் மனித ஆத்மாவை மூன்று சரீரங்களுக்குள் அடைத்து வைத்துள்ளார். இதில் எண்ணங்களால் ஆன 'காரண சரீரம்' முதன்மையானது. இரண்டாவது மனம் மற்றும் உணர்ச்சிகளால் ஆன 'சூட்சும சரீரம்'. மூன்றாவதாக புலன்களால் உணரக்கூடிய‌ சாதாரண 'ஸ்தூல சரீரம்' ஆகும். சமீபத்தில் உடலைவிட்டு பிரிந்த மனிதன், அதே போன்ற மனோபாவம் மற்றும் ஆன்மீகத் தன்மை உடைய ஒரு சூட்சும குடும்பத்தால் ஈர்க்கப்படுகிறான். சூட்சும உலகின் சராசரி ஆயுட்காலம் ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டுகள்.

மனிதனுடைய ஆத்மாவானது இறைவனின் முப்பத்தைந்து எண்ணங்களின் சேர்க்கை ஆகும். இதிலிருந்து பத்தொன்பது மூலப்பொருட்கள் அடங்கிய சூட்சும உடலையும், பதினாறு மூலப்பொருட்களை உள்ளடக்கிய ஸ்தூல உடலையும் உருவாக்கினான். ஸ்தூல உடலானது புலன்களின் மூலம் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனால் சூட்சும உடலோ ஒளிவடிவிலான அதிர்வலைகள் மூலம் தங்களின் ஆசைகளை, அனுபவங்களை நிறைவேற்றிக் கொள்கிறது. இது ஒரு கனவு நிலைக்கு ஒப்பானது ஆகும். மேற்கூறிய இன்ப நிலைகளைக் கடந்த ஆத்மாவானது அடுத்ததாக காரண சரீரத்தில் வந்து நிற்கும். காரண உலகில் நினைத்த மாத்திரத்தில் எல்லா இன்பங்களையும் அடைய முடியும்.

ஒரு மனிதன் கற்பனையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் காரணவாசி நிஜத்திலும் செய்ய முடியும். ஸ்தூல உடல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிப்பது போல் மனதால் நினைத்தால் காரண உடலானது நிஜத்தில் பயணிக்கும். நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஆசைகள் என்பதே காரண உலகில் இல்லை. நான் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு ஒருவன் தன் மனதை ஒருமுகப்படுத்தும் பேராற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன் மண்ணுலகம், சூட்சும உலகம் ஆகிய இரண்டு உலகங்களின் முழுமையான பரப்பளவையும் 'ஒளிரும் பந்து வடிவிலான நிலையில்' வெளியிலிருந்து பார்க்கிறான்.அவற்றை தன் எண்ணங்களாகவும் மாற்றிக் காண்கிறான். ஒருவன் கண்ணை மூடிக்கொண்ட பின்னரும் இடங்களைப், பொருட்களை காட்சிகளை எப்படி எண்ணத்தினால் உணர்கிறானோ அப்படியே இது சாத்தியமாகும்.

சூட்சும் உலகில் நீடித்து வாழ்வதற்கு மனிதன் தன் மண்ணுலகக் கடமைகள், இச்சைகளை முழுவதுமாக தீர்த்துவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால், தங்கள் வினைக் கடன்களைத் தீர்க்க வேண்டியவர்கள் மீண்டும் ஸ்தூல உடலில் பிறப்பெடுக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். மண்ணுலக கர்மாக்களை தீர்க்காதவன் சூட்சும உலகில் வந்து மரணமெய்தும் போதும் எண்ணங்களால் ஆன காரண உலகில் அனுமதிக்கப்படுவதில்லை. மீண்டும், மீண்டும் இவர்கள் ஸ்தூல மற்றும் சூட்சும உலகிலேயே அலைந்து கொண்டு இருப்பார்கள். பக்குவமடையாத மனித ஆத்மா இப்படியான மூன்று சரீர பந்தங்களிலிருந்தும் விடுபடுவதற்கு எண்ணற்ற பிறவிகளை எடுக்க வேண்டியுள்ளது.

இச்சைகளிலிருந்து விடுபட்டு ஆத்மாவானது மூன்று சரீரக் கூடுகளிலிருந்தும் வெளியேறுகிற போது தான் அதன் தனித் தன்மையை இழக்காமல் பரமாத்மாவுடன் இனைந்து விடுகிற நிலை ஏற்படும். மண்ணுலகில் இருக்கும் போதே இந்த மூன்று நிலைகளையும் மனிதன் உணர்ந்து இருக்கிறான். புலன்கள் வழியாக தொடும் பொழுதோ, ருசிக்கும் பொழுதோ அல்லது கேட்கும் பொழுதோ ஸ்தூல உடலில் செயல்படுகிறான். கற்பனை செய்யும் பொழுதும், கனவுகளில் லயிக்கும் பொழுதும் சூட்சும சரீரத்தில் செயல்படுகிறான். எண்ணங்களால் வாழும் பொழுதும், தியானத்திலும் காரண சரீத்தில் செயல்படுகிறான்.

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளில் பதினாறு மணி நேரம் ஸ்தூல உடலில் சஞ்சரிப்பான். எஞ்சியுள்ள நேரத்தை தூக்கத்தில் செலவிடும் பொழுது கனவுகளின் மூலம் சூட்சும சரீரத்தை அடைகிறான்.அங்கே நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறான். அவனுடைய நித்திரை கனவுகளற்று ஆழ்ந்து இருக்கையில் தன் உணர்வை அதாவது 'நான்' எனும் உணர்வைக் கடந்து காரண உலகத்தில் வாழ்கிறான். கனவு காண்பனுடைய நித்திரை களைப்பில் ஆழ்கிறது. மாறாக தன்னை மறந்து காரண சரீர நிலை எய்தும் உடலானது புத்துணர்ச்சி பெறுகிறது.

ஸ்ரீ யுக்தேஸ்வரர் கூற்றின்படி மனித ஆத்மாவானது அழிவில்லாத ஒன்று. ஆற்றலை எப்படி ஆக்கவோ, அழிக்கவோ முடியாதோ அதே நீதிப்படி இறைவனது எல்லா படைப்புகளும் உள்ளன. அது ஒன்றிலிருந்து வேறொன்றாக, ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவதாக உள்ளது. எல்லாவற்றின் இறுதி நிலையும் அவனிடமே வந்து அடங்குகின்றன. அங்கு இன்பத்தை தவிர வேறெதுவுமில்லை. மனிதனைப் பொறுத்த அளவில் மனம் தான் எல்லாவற்றையும் தீர்மாணிக்கும் சக்தி படைத்ததாக இருக்கிறது. அதை தியான‌த்தின் மூலம் ஒருமுகப்படுத்தி செயல்படுகிற போது பிரபஞ்சத்தின் ரகசியத்தை உணர முடியும்.

தியானம் என்பது என்ன?

தியானம் என்பது ஒரே வரியில் சொல்வதென்றால் பிரபஞ்சத்தோடு நம்மை இனைத்து வைப்பது அல்லது உணர வைப்பது என்று சொல்லலாம். மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது.

அடிப்படையில் மேல் மனம், அடிமனம், ஆழ்மனம் என்று மனமானது மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐம்புலன்களின் வழியே புற விஷயங்களை நாம் உணர்ந்தவாறு இருக்கிறோம். இவை அனைத்தும் மேல் மனத்தினால் உணரப்பட்டு அடிமனத்தினோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது.

ஆனால் ஆழ்மனம் என்பது பெரும்பாலும் சராசரி மனிதர்களால் உணரப்படாமலே இருக்கிறது. எண்ணத்தின் அடிப்படியிலான அத்தனை தகவல்களும் இறுதி மூச்சு உள்ளவரை ஆழ்மனத்தினால் மறைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. மறந்து போன தகவல்களைக் கூட மெஸ்மரிசம் மூலம் மருத்துவர் கண்டறிந்து சொல்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஒரு நபர் ஈடுபடும் போது மேல்மனம் அதை மறைக்கப்பட்ட விஷயமாக நம்ப வைத்தாலும் ஆழ்மனம் அதை ஏற்பதில்லை. தவறென்று சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக ஆழ்மனத்தோடு தொடர்புடையவர்கள் தகாத செயல்களில் ஏடுபடுவதற்கான வாய்ப்பையே அளிக்காமல் ஆழ்மனமானது கடிவாளம் போட்டவாறு செயல்பட்டுக் கொண்டிருக்கும். எனவே செயல்கள் நல்வழிபடுத்தப்பட்டு வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக மாறுகிறது.

ஐம்புலன்களின் எந்த தூண்டலுக்கும் உள்ளாகாதவாறு மனதை ஒரே புள்ளியில் குவித்து தியானம் செய்வதால் டென்ஷன், படபடப்பு, கோபம், வெறுப்பு முதலிய வேண்டாத பிரச்சினைகள் தூக்கி எறியப்படுகின்றன. மனம் எப்பொழுதும் சாந்தமாகவும், சந்தோஷமாகவும் அதே சமயம் கூர்மையான நினைவாற்றலுடன் இய‌ங்க‌ ஆர‌ம்பிக்கிற‌து.

கடவுளின் பின்குறிப்பு.

கடவுள் சொல்வதைக் கேளுங்கள். டாஸ்மாக் பாரில்கூட நீங்கள் தியானம் செய்ய முடியும். நான் சந்தோஷமாக இருந்தாலும், துக்கத்தில் இருந்தாலும் அங்குதான் போவேன். போதுமான சரக்கடித்த பின் என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. கமான் ச்சியர்ஸ்.

Tuesday, February 5, 2008

மாடு மேய்க்கப் போகலாம் ''டுர், டுர்ரா....'' வழிகாட்டும் மனுதர்ம மத்திய, மாநில அரசுகள்.

அய்யய்யோ! சூத்திரன் கல்வி கற்றால் லோகம் எப்படி ஷேமமா இருக்கும்?'' என்று யாராவது பயந்து நடுங்கி இருக்க வேண்டும்। அறுபது எடு! இல்லன்னா கல்வியை விடு! என்று அறிவித்திருக்கிறது மன்மோகன்சிங் அரசு. அதாவது இனிமேல் எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் ப்ளஸ்-டூ தேர்வில் அறுபது விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டுமாம். இல்லன்னா அவங்க தொழிற்கல்வி படிக்கும்போது ஸ்காலர்ஷிப் தர மாட்டாங்களாம். ''அப்படியா சொல்றீங்க? பேஷா செஞ்சிடுவோம்'' என்று சலாம் போட்ட பெரியாரின் பேரன் கருணாநிதி, சட்டக் கல்லூரி மாணவர்களின் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு ஜகா வாங்கியிருக்கிறது. இதைத் ''திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி மைய அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதியிருக்கிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துக் கொள்ளாமல் போனால் இதுவரை தமிழகத்தில் என்ன நடமுறை இருக்கிறதோ, அதுவே தொடரும்'' என்று சட்டசபையில் அறிவித்திருக்கிறார்।

கடந்த செப்டம்பர் 24ம் தேதி பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம் 2007-08 முதல் 2011-12ன் கீழ் ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தொழிற்கல்வி பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறவேண்டுமானால் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்றிருப்பது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இதைத் தமிழக‌ அரசும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியது. இதனால் ஒட்டுமொத்த தலித் சமூகத்தின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழகம் முழுவம் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினார்கள், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார்கள்.

''இது முழுக்க, முழுக்க அரசியல் சட்டத்திற்கு எதிரான ஒரு அறிவிப்பு'' என்கிற சேலம் சட்டக்கல்லூரி மாணவரான சீனிவாசராவ், ''சமூக மற்றும் பொருளாதாரக் கல்வியில் மத்திய அரசு தலையிட வேண்டுமானால் எஸ்।சி/எஸ்.டி கமிஷன், தலித் அமைப்புக்களின் தலைவர்கள், மாணவப் பிரநிதிகள் ஆகியோரின் ஆலோசனை, அனுமதி பெற்றுத்தான் திருத்தம் கொண்டுவர வேண்டும். இவற்றை கவனிப்பதற்கென்றே பிரனாப் முகர்ஜி தலைமையில் கேபினெட் குழு இருந்தும் யாரிடமும் கேட்காமல் திட்டக்குழுத் துனைத் தலைவரான மாண்டென்சிங் அலுவாலியா தன்னிச்சையாக இந்த முடிவினை அறிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வந்திருந்த எஸ்.சி/எஸ்.டி கமிஷன் தலைவர் பூட்டாசிங்கிடம் இது குறித்து முறையிட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார்.

சிமெண்ட் விலையாகட்டும், நதிநீர்ப் பங்கீடாகட்டும் சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்ட பிறகே அரசு, முடிவுகளை அறிவிக்கிறது. மருத்துவக்கல்வியில் வெறும் நூறு, இருநூறு உயர்சாதி மாணவர்கள் கூக்குரலிட்டதற்கே பிரதமர்வரைத் தலையிடுகிறார்கள். ஆனால் லட்சக்கணக்கில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் ஒரு வார்த்தைக்கூட கேட்காமல் தலித்துக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஒழித்துக்கட்டும் நோக்கில் செயல்பட்டுள்ளது வண்மையான கண்டனத்திற்கு உரியது'' என்கிறார்.

''புதுசாக எதுவும் செய்ய வேண்டாம்। இருக்கிற சலுகைகளை ஏன் பறிக்கிறாய்? என்றுதான் கேட்கிறோம். 722/1977ம் ஆண்டு சட்டப்படி எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு வருமான உச்சவரம்பைக் கணக்கிலெடுக்காமல் முழுவதுமாக இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். மற்ற மாநில அரசுகள் இதை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் செயல்படுத்தி வருகிறது. ஆனால், 1997க்குப் பிறகு சிறு திருத்தம் கொண்டுவந்த தமிழக அரசு இதில் பாதியளவு கூட நடமுறைபடுத்தவில்லை. அதன்படி ஆண்டுக்கு நூறு கோடி என்று பார்த்தாலும் கடந்த பத்தாண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு எங்களை வஞ்சித்துள்ளனர்.

எங்கப்பா ஒரு சாதாரண கூலித் தொழிலாளி. என்னால் மருத்துவக் கல்லூரிக்கோ, என்ஜினியரிங் கல்லூரிக்கோ பணம் கட்ட முடியாததால்தான் சட்டக்கல்லூரிக்கு வந்திருக்கிறேன். இதிலும் அறுபது மார்க் எடுத்தால்தான் ஸ்காலர்ஷிப் என்றால் எங்களைப் போன்றவர்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொல்லாமல் சொல்கிறது அரசு'' என்கிறார் மதுரை சட்டக்கல்லூரி மாணவரான வையவன்.

''அறுபது சதவிகிதம் எடுத்தால்தான் ஸ்காலர்ஷிப் என்கிற அரசாங்கம் அந்தளவிற்கு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்। இன்னும் எத்தனையோ கிராமங்களில் பள்ளிகளுக்கு கூரை இல்ல, கூரை இருந்தால் வாத்தியார் இல்ல. என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகப் பணம் கொடுப்பதால் 35% மார்க் எடுத்தாலே போதும், அவர்களுக்கு உயர்கல்வி கொடுக்கலாம் என்கிறது அரசாங்கம். அதாவது கொழுத்த பணக்காரர்கள் குறைந்த மார்க் எடுத்தாலே போதுமாம். ஆனால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கிற தலித்துகளுக்கு அனுமதி இல்லையாம்.

எனக்கு அப்பாவுமில்லை, அம்மாவும் இல்லை. அவ்வப்போது பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டு அக்கா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறேன். இன்று சட்டம் படிக்க வந்ததால்தான் இந்த விஷயங்களப் பற்றி பேச முடிகிறது. இல்லயென்றால் வறுமை காரணமாக எவன் சோறு போடுகிறானோ அவனுக்கு கூலிப்படையாகத்தான் இருக்க நேரும்'' என்கிறார் சென்னை சட்டக் கல்லூரி மாணவரான சுதாகர்.

பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவரான பேராசிரியர் சுக்தேவ் தோரட், ''அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் பட்டியல் இன மாணவர்களின் பயிற்சிக் கட்டணம் முழுமயாக திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்'' என்று பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பரிந்துரை செய்துள்ளார்। ஆனால், இருக்கிற சலுகைகளையும் பறித்துக்கொண்டு வயிற்றில் அடித்துள்ளது அரசாங்கம். தலித்துகளுக்கு 18% இட ஒக்கீடு இருந்தும், இந்த ஆண்டின் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் வெறும் ஆறு சதவிகிதம் மட்டுமே. ஏழ்மை காரணமாக மார்க் இருந்தும் அவர்களால் பணம் கட்டிப் படிக்க முடியவில்ல. 97ம் ஆண்டு தமிழக அரசின் திட்டச் செலவினம் நாண்காயிரம் கோடிக்குக் கீழ். 2007ல் இது 14 ஆயிரம் கோடியாகிவிட்டது. ஆனால் தலித் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகை மட்டும் 97ல் எவ்வளவு இருந்ததோ அதுவே நீடிக்கிறது.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வருமாண வரம்பைச் சரிபார்க்க வேண்டுமென்று மத்திய அரசு கூறினாலும் இன்னும் ஐம்பதாயிரம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது தமிழகம். இது பிற்படுத்தப்பட்ட(mbc) சமூகத்திற்கு உள்ள உச்சவரம்பைவிட குறைவான தொகையாகும். தனியார் தொழிற்கல்லூரிகளில் இட ஒக்கீடு கேட்டுப் போராடிவரும் இந்த வேளையில், 'நீ படிக்க வந்தால்தானே இட ஒக்கீடு? பணம் இல்லயென்றால் பேசாமல் மாடு மேய்க்கப் போ, இல்லையென்றால் உன் குலத்தொழிலைப் பார்' என்று குறிப்பால் உணர்த்கிறது அரசாங்கம். இது உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் பிரபா.கல்விமணி.

''ஒரு சட்டத் திருத்தத்தில் இவ்வளவு ஆபத்து இருக்கிறதென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போயிருக்க வேண்டும்। அப்படி வரும்போது மாநில மக்களின் நன்மை கருதி அதை மறுக்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரான தங்க.கலியபெருமாள் அதை முழுமனதோடு கையெழுத்திட்டு அனுப்புகிறார். அதை அரசு உடனடியாக செயல்படுத்தியிருக்கிறது. சில மாணவர்கள் கலியபெருமாளை நேரில் சந்தித்து ''என்ன சார் இப்படியெல்லாம் உத்தரவு போட்டிருக்கீங்க?'' என்று கேட்டிருக்கின்றனர். அதற்குக் கலி என்ன சொன்னது தெரியுமா? ''அப்படியா! நான் படிச்சே பாக்கலயேப்பா'' என்றதாம். மஞ்சத் துண்டு மைனரான முதல்வர் கருணாநிதி நவீன மனுதர்மராக மாறியதையே இந்த உத்தரவு கோடிட்டுக் காட்டுகிறது.

தலித்துகளின் பிரதிநிதியான விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சினிமா கொட்டாயில் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த நேரம் பார்த்து சட்டக் கல்லூரி மாணவர்கள் சத்தம் போட்டு அலற, அலறியடித்துக் கொண்டு ஓடோடி வந்து மைக் பிடித்துத் தன் கடமையை நிறைவேற்றிச் சென்றுள்ளார். அப்புறமேட்டு இவுரு சி.எம்.மைப் பாத்து கோரிக்க உட்டாராம். ''அட! உனுக்கு இல்லாததாப்பா? ஒடனே சென்ட்ரல் கவுர்மென்ட்டுக்கு லெட்டர் போடுறேம்ப்பா... நீ தெய்ரியமா இரு. ஆனா புலிங்கிள பத்தி மாத்திரம் பேசாத. எனுக்கு பயமா கீது''ன்னு கேட்டுக்கினாராம்.


''ஐய்... ஜாலி! ஜாலி!''ன்னு சொல்லிக்கிட்டே திருமா வந்த பிறகு ''திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி மைய அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதியிருக்கிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துக் கொள்ளாமல் போனால் இதுவரை தமிழகத்தில் என்ன நடமுறை இருக்கிறதோ, அதுவே தொடரும்'' என அறிவித்திருக்கிறார் குட்டைப் பாவாடை ஸ்ரேயாவை ரசித்தபடி கருப்புப் பணத்தை ஒழித்துக் கட்டிய பகாசுரன் ரஜினிக்கு எழுந்து நின்று விருது வழங்கிய கலைச் செம்மல் கருணாநிதி.

பலம் பொருந்திய பா.ம.க தமிழக அரசின் திட்டங்களை வெட்ட வெளிச்சமாக எதிர்க்கும்போது ''ஆமாம், நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம். அவர்களுக்காக ஆயுதம் கடத்த முடிந்தால் அதைப் பெருமையாகக் கருதுகிறோம்'' என்று கம்பீரம் காட்டும் திருமா, தி.மு.க அரசைக் கண்டித்து ஸ்காலர்ஷிப் விஷயத்தில் அரசான வெளியான அன்றே ஆர்ப்பாட்டம் செய்யாதது ஏன்?

தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெறும் கண் துடைப்பு மட்டுமே. இன்றைக்கு அமலில் இருக்கும் இந்த மனுதர்ம உத்தரவுக்கு என்ன பதில் இருக்கிறது இவர்களிடம்? இவங்க கடிதம் எழுவாங்களாம், அவங்க படிச்சிப் பாத்துட்டு பதில் போடுவாங்களாம். அவரைக்கும்? அதுக்குள்ள ஜெயலலிதா முதல்வராயிடுவாங்க, திருமாவளவன் நடித்த புதுப்படமும் ரிலீஸ் ஆயிடும். அறுபது சதவிகிதம் மதிப்பெண்கள் என்பதை அனைவரும் மறந்துவிடுவார்கள். அதுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் மாடு மேய்க்கப் போகலாம் ''டுர், டுர்ரா....''